நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிப்பதற்குக் கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகினர். பல்வேறு தவணைகளில் 4 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. இந்த கடன் ஒப்பந்தத்தின் பொழுது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டு படத்தின் அனைத்து உரிமைகளை வழங்க வேண்டுமெனவும், 2018 அக்டோபருக்குள் படத்தை முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என சன் ப்ரொடக்சன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில் மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை பொறுத்தவரை பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு அவகாசம் கேட்ட பொழுதும் கூட இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஜப்தி குறித்து சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுதினம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
0 கருத்துகள்